மரபு விதை தாம்பூல பரிசு

மரபு விதை தாம்பூல பரிசு
NATIVE SEEDS RETURN GIFT

நண்பர்களுக்கு வணக்கம்..
                                                 திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு... அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது..பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர்.. சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது.. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த சில வருடங்களாக திருமணங்களுக்கு  மரபு விதை பரிசுகளை வழங்கி வருகிறோம். நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது.. நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 7 நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.
         2014 ஆம் ஆண்டு முதல் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். சேகரிப்பது 5 விதையோ 10 விதையோ தோட்டத்தில் விதைத்தால் மண்ணும் மழையும் பல மடங்கு விதைகளை திருப்பி கொடுத்தன.. அவ்வாறு தோட்டத்தில் கிடைத்த விதைகளை மரபு விதைகள் கேட்போருக்கு 10,20 விதைகளாக கொடுக்கின்றோம். அவ்வாறு வாங்கி செல்லும் நண்பர்கள் அவர்கள் தேவை போக மீதமுள்ள விதைகளை பகிர்கின்றனர். இவ்வாறு விதைகளை பகிர்ந்து வரும் சூழலில் நிறைய நண்பர்கள் தங்களுடைய வீட்டில் நடக்கும் திருமணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா, தொழில் தொடங்கும் விழா, ஊர் திருவிழா என பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வபோது விதைகளை கேட்டதை தொடர்ந்து "தாம்பூல விதைப்பைகள்" என்ற பெயரில் மரபு விதைகளை பகிர்கின்றோம். இதன் மூலம் ஒரே சமயத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் விதைகள் சென்றடைகின்றன.. விதைகள் பெற்ற நண்பர்கள் விவசாயிகளாக இருப்பின் நிலங்களில் பயிரிட்டு விதைகளை காக்கின்றார்கள். நகரங்களில் இருப்போர் வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைத்து தன் குடும்பத்திற்கான காய்கறிகளை உற்பத்தி செய்வதோடு விதைகளையும் காக்கின்றனர். மரபு விதைகள் அனைவருக்கும் விதைகளாக சென்றடைவதோடு மட்டுமன்றி விதைகளை காக்க வேண்டுமென்ற விழிப்புணர்வையும் விவசாயம் செய்யாதவர்களையும் சென்றடைகிறது.. தொடர்ந்து இந்த மரபு விதை பரவலாக்கும் பணியில் எங்களை ஈடுபடுத்திக்கொள்கிறோம். தங்களுடைய வீட்டிலோ, நண்பர்கள் உறவினர்கள் வீட்டிலோ, ஏதேனும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தால் நிகழ்விற்கு வரும் நண்பர்களுக்கு மரபு விதைகளை பரிசாக அளியுங்கள்.தாம்பூலப்பைகளில்  தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொடி காய்கறிகள், கீரைகள் என பத்து ரக விதைகள் கொடுக்கின்றோம். தேவைப்படும் அளவில் பெற்றுக்கொள்ளலாம்.

நாம் சேமித்து வைத்திருக்கும் நாட்டு ரக விதைகளை தாம்பூல பைகளில் கொடுக்கலாம். அது நிறைய மக்களுக்கு உடனடியாக போய் சேரும்.இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. அவர்களுக்கு இந்த நாட்டு ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே..! நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். இவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்..

நன்றி,
Vellappandi
வாட்ஸ்அப் +919488250980    
Email- vellappandi@gmail.com